எசேக்கியேல் 44:23-29 தமிழ்

23 அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப்போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள்.

24 வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருந்து, என் நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் நியாயப்பிரமாணத்தையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கக்கடவர்கள்.

25 தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன், புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களில் ஒருவனும் செத்த ஒருவனிடத்தில் போய்த் தீட்டுப்படலாகாது.

26 அவன் சுத்திகரிக்கப்பட்டபின்பு, அவனுக்கு ஏழுநாள் எண்ணப்படவேண்டும்.

27 அவன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலம் இருக்கிற உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கிற நாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலுத்தக்கடவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

28 அவர்களுக்குரிய சுதந்தரம் என்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம்; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நானே அவர்கள் காணியாட்சி.

29 போஜனபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் புசிப்பார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை பண்ணப்பட்டதெல்லாம் அவர்களுடையதாயிருப்பதாக.