சங்கீதம் 11 தமிழ்

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

1 நான் கர்த்தரிடத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி, "பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ" என்று சொல்லுகிறீர்கள்.

2 இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

3 அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றனவே, நீதிமான் என்னசெய்வான்?

4 கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.

5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

6 துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

7 கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.